ஜெயலலிதா, நரேந்திர மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அல்கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகழ்பெற்ற கேரள கோவில்களான குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவில்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் அந்தக் கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மிரட்டல் விடுத்தவர்கள் தாங்கள் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுளளனர். அதேநேரம், இந்தக் கடிதம் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.


ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் குருவாயூர் பொலிஸ் நிலைய இன்ஸ் பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


அந்தக் கடிதம் கிடைத்தவுடன் குருவாயூர் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்துக்குப் பொலிஸ் அதிகாரிகள் விரைந்துசென்று சோதனை செய்தனர். கோவிலின் உள்ளேயும் கோவிலைச் சுற்றியும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.


அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு கோவில் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி ஆலயம். இங்கு தான் 150 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த பொக்கிஷ அறைகளில் அரிய தங்க மற்றும் வைர நகைகள் இருந்தமை சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.


இதையடுத்து, இந்தக் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


வெடிகுண்டு மிரட்டலையடுத்து இந்த கோவிலிலும் சோதனை நடத்தப்பட்டது. எனினும், சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.


இந்தக் கடிதம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகப் பொலிஸார் தெரிவித் தனர். தமிழக பொலிஸாரும் இது தொடர்பில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இருப்பிடத்துக்கு மேலும் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இந்தக் கொலை மிரட்டல் கடிதம் குறித்த விபரம் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் அல்கொய்தா பெயரில் இயங்கும் நபர்கள் யார் என்ற விசாரணைமுடுக்கிவிடப்பட்டுள்ளது. 


கேசரி 


Tags: , ,