சமீபத்தில் வெளியான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த "வானம்" படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதில் ”அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்" என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது.
இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது:
சிம்புவின் "வானம்" படத்தின் 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை தயார் செய்தது நான் தான்.
இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே, சினிமா வாழ்க்கையில் சிம்புவும் எம்.ஜி.ஆர் போன்ற நிலைமையை அடைய வேண்டும், அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம்.அதற்காக சிம்புவை நான் தயார் செய்து வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான்.
மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர் எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன்.
எம்.ஜி.ஆர் மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லா தகுதியும் இருக்கிறது, நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான்.
தற்போது நான் "ஒரு தலைக்காதல்" படத்தை இயக்கி வருகிறேன், இந்த படம் ஒரு அழகான காதல் கதை.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன்.
விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன் என்று அவர் கூறினார்.